Thursday 23 February 2012

நிஜமாகாத நிழல்


நிஜமாகாத நிழல்





அப்பா அன்று திட்டிய வார்த்தையினை ரவியினால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. அப்போது அவனுக்கு பதினேழு வயதுதான் என்றபோதிலும், தான் செய்த ஒரு சிறிய தவறுதலுக்காக இப்படி தன்னை தனது நண்பர்கள் அறிய அத்தனை உரத்தக் குரலில் ஊரறிய தந்தை உறுமிக்கொண்டிருக்கிறாரே என ரவி பொறுமிக்கொண்டிருந்தான். ஆற்றிற்குச் சென்று குளிக்கக்கூடாது என்ற அப்பாவின் கட்டளையினை மீறியதால் வந்த விளைவினை தண்டணையாக அனுபவித்துக்கொண்டிருந்தான் ரவி. ஒரு புறம் தந்தை அடிக்கும் அடிகளைச் சகித்துக்கொண்டிருக்க அவனுக்கு பெலனிருந்தபோதிலும், அதனை நண்பர்கள் பார்க்கின்றதை அவனால் சகிக்க முடியவில்லை. உடன் பிறந்த சகோதரர்களும் அப்பாவின் கைக்குத் தன்னைத் தப்புவிக்காமல், தன்னைப் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கின்றனரே என்ற வெறுப்பும் அவனுக்குள் நெருப்பாய் கிளம்பியது. அப்போது ஓடிவந்தாள் அவனது மூத்த தமக்கை, 'போதும் விடுங்க, ஏதோ ஒரு நாள் தெரியாம ஆத்துல குளிக்கப் போயிட்டான், இனிம போக மாட்டான்' என்று அப்பாவிடம் அவள் பேசியபோது சற்று அடங்கியது அவன் கோபக் கனல். 

அப்பாவிற்குப் பயந்து தண்டனையை அனுபவித்துக்கொண்டு வீட்டு முற்றத்தில் நின்றுகொண்டிருந்த ரவியின் மனது சிறகடித்து தன்னோடு சேர்ந்து ஆற்றிற்கு வந்த நண்பர்களின் வீட்டிற்குப் பயணமானது. அவனது வீட்டிற்கு அருகாமையில் உள்ள ஒரு நண்பனும் இவனோடு சேர்ந்து அதே ஆற்றில் குளித்தவன், என்றபோதிலும் அவனது தந்தை அவனைத் தண்டிக்காததைக் கண்டு இடிந்துபோயிருந்தான் ரவி. ஏன் எனது தந்தை மட்டும் என்னைத் தண்டிக்கின்றார்? என்ற கேள்விக்கு விடை தெரியாமல் திணறிக்கொண்டிருந்தது அவனது மூளை. நான் அந்தக் குடும்பத்தில் மகனாகப் பிறந்திருந்தால் எத்தனை நலமாக இருந்திருக்கும் என நிஜமாகாத நிழலைக் கனவாகக் கண்டு நொந்துகொண்டிருந்தான் ரவி. ஒரு குற்றம் செய்ததற்காக, தான் முன்னே செய்த எத்தனையோ குற்றங்களை ஞாபகப்படுத்தி ஞாபகப்படுத்தி தந்தை எரிந்து விழுவதைக் கண்டு ரவியின் மனது முறிந்துகொண்டிருந்தது. குடும்பத்தின் மேல் கோபமுற்று வெளிNயினால் மட்டுமே விடுதலை என்ற முடிவினை எடுத்தான் ரவி. 

அது ஒரு மாலை நேரம், தனது தெருவில் ஆலய மணி ஒலித்துக்கொண்டிருந்தது, ரவியின் தாய் மாலை ஆராதனைக்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்தார். 'கோயிலுக்கு வரலியா?' என்ற தாயின் கேள்விக்கு 'போம்மா வாரேன்' என்று சாதுரியமாகப் பதில் பேசி தப்பிக்கொண்ட ரவி, அந்த நேரத்தில் வீட்டிற்கு விடைகொடுத்துவிட்டு பயணமானான். எப்படியோ கையில் கிடைத்த காசு கொஞ்சம், அதனை ஒரு துணிப்பையில் பத்திரமாய் பொதிந்து வைத்துக்கொண்டு வெளியேறினான் வீட்டைவிட்டு. வழியில் அவனைக் கண்ட முதியவர் ஒருவர், அவனிடம் 'தம்பி எங்க போற, வீட்ல சொல்லிட்டுத்தான் போறியா?' என குறுக்கிட்டபோது, சினம் வந்தபோதிலும் சிரித்து மழுப்பிக்கொண்டு பேருந்து நிலயத்தை அடைந்தான் ரவி. எங்கு போவது? என்ன செய்வது? என அறியாமல் வெறுமையாய் இருந்தது ரவியின் மனது. எதை எதையோ நினைத்துக்கொண்டு இரவு பேருந்து நிலையத்தை அடைந்த ரவிளூ அங்கும் என்ன செய்வது என அறியாதவனாய் தொடர்ந்து பயணிக்க விரும்பி, எப்படியோ ஒரு சுற்றுலா ஸ்தலத்தைச் சென்றடைந்தான். இரவு நேரம், குளிர் ஒருபுறம், எங்கு தங்குவது, யார் துணை என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைக்காதவனாக உறக்கத்தில் உலாத்திக்கொண்டிருந்த அவனது மனது அமைதியை இழந்தது. உடலில் உதறல், உள்ளத்தில் உளரல்ளூ இனி மீண்டும் வீட்டுக்குப் போகனுமா? என்று அவனே தன் மனதில் கேட்டுக்கொண்டு 'வேண்டாம்' என பதிலும் சொல்லிக்கொண்டான். 

அப்படி என்றால் என்ன செய்வது என தன்னிடமே அவன் கேட்டக் கேள்விக்கு, 'தற்கொலை செய்துகொள்' என்ற பதிலையே அவனது மனது ரீங்கரித்துக்கொண்டிருந்தது. கையில் வைத்திருந்த துணிப்பையினை அருகாமையில் உள்ள ஒரு மரத்தில் தொங்கவிட்டுவிட்டு, தற்கொலைக்கு ஆயத்தமானான் ரவி. தகப்பன் தனக்குக் கொடுத்த சிறிய தண்டணைக்காக, தனக்குத் தானே இத்தனை பெரிய தண்டணையை கொடுக்கவேண்டுமா என்பதையெல்லாம் நினைக்க அவன்கு கணங்கள் இல்லை. தூக்கு மேடை கைதியைப் போலை தன்னையே அதில் ஏற்றிக்கொள்ள ஆயத்தமாகிக்கொண்டு, துக்கத்தோடு இருந்த ரவியை தூக்கம் தாலாட்டி தூங்கவைத்தது, தன்னையும் அறியாமல் தூங்கிக்கொண்டிருந்தான் ரவி. காலை 7 மணிளூ சூரியக் கதிர் தன் மேல் பட எழுந்துகொண்ட அவன் திடுக்கிட்டான்ளூ 'நான் சாகனும் என்றுதானே வந்தேன், எப்படி தூங்கினேன்' என்று விழித்த அவனது கண்களுக்கு முன்னால், சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் பட்டது. உல்லாசமாய், ஜோடியாய், குடும்பமாய், குழந்தைகளுடன் வந்த மக்களைக் கண்ட ரவி தனிமையை உணர்ந்தான். தனது தவற்றினை உணர்ந்து, வீட்டை நோக்கிப் பயணமானான் ரவிளூ வழியில் பழங்கால ஆலயம் ஒன்றின் படியில் அவனது கால்கள் முழங்காலிட்டது. மனம் இறைவனை நோக்கிப் பார்த்தது, மௌனம் சற்று நேரம் நீடித்தது, அவனது வாழ்க்கையின் கருமேகங்களெல்லாம் கண்ணீராய் பொழிந்துகொண்டிருந்தது. ஆனால் அவனது மனதோ அமைதி அடைந்தது. பூட்டிய ஆலயத்தின் வெளியே நின்றிருந்தாலும் ரவியின் மனதிற்குள் இறைவன் நுழைந்திருந்தார். ரவி தற்கொலை செய்துகொள்ளவில்லை ஆனால், இறைவனின் சந்நிதியில் தன்னைக் கொலை செய்திருந்தான். அன்று அவனுக்குப் பிறந்த நாள். சாவு அவனுக்கு நிஜமாகாமல் நிழலானது. தன்னைக் காப்பாற்றியது இயற்கையான தூக்கமல்ல இறைவன் என்பதை உணர்ந்த அவனது வாழ்க்கை சூரியனைப் போல பிரகாசமானது. 

இடிந்து போனதற்காக இடித்துக்கொள்வதும்
அடிக்கப்பட்டதற்காக அழித்துக்கொள்வதும்
துக்கத்தை மறக்கத் தூக்கில் தொங்குவதும்
கண்ணீருக்கு விடையாய் கல்லறையை நினைப்பதும் ஏன்? 
வல்லவரை நினைத்து வா! அவர் வாழவைப்பார். 



No comments:

Post a Comment