Friday 13 April 2012

தனவதி


தனவதி


அது ஒரு மாலை நேரம். காட்டுப் புறத்தில் தன்னைத் தானே காப்பாகக் கொண்டு அமைந்திருந்தது அந்தத் தனி வீடு. எட்டிக் கூப்பிடும் தூரத்திலும், எட்டிப் பார்க்கும் தொலைவிலும் வீடுகள் வேறேதும் இல்லாத நிலையில் அமைதியில் துயிலுறங்கிக்கொண்டிருந்தது. சாலைகளில் ஓடும் வண்டிகளின் சத்தம், பயணிகளின் அலசடி, கடைத்தெரு வீதிகளின் சலசலப்பு என அத்தனைக்கும் தன்னை விதிவிலக்காக்கிக் கட்டப்பட்டிருந்தது

அந்நிய நாட்டிற்கு அன்று அடிமைப்பட்டிருந்தாலும், அந்நியர் வியக்கும் வீட்டின் விதிகளைக் கொண்டது இந்தியா என்பதற்கு அடையாளமாக வாழ்ந்துகொண்டிருந்தாள் தனவதி. மெலிந்த உருவம், எண்பத்து ஒன்பது வயதினைத் தாண்டி தொண்ணுரைத் தொடும் நாள் அது. அன்று காலைப் பொழுதில், நான்கரை மணிக்கெல்லாம் விழிப்புத் தட்டியது. உறக்கத்தைக் களைந்து, வீட்டு வேலைகளைத் தொடங்க இன்னுஞ் கொஞ்சம் நேரமாகட்டுமே என கட்டிலில் படுத்தே கிடந்தாள். பொழுது விடியும் வரைப் பொறுமையாயிருக்க அவளது மனது பொறுத்துக்கொள்ளவில்லை. கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள், கருக்கலில் எழுந்து வீட்டு வேலைகளைச் செய்யத் தாயினால் பழக்கப்படுத்தப்பட்டவள். பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீடு வந்தபோதும் அந்தப் பழக்கத்தை தனது தனித்தன்மையாகக் காத்துவந்தவள் தனவதி. பிறந்த வீட்டிலிருந்து புருஷனோடு வாழ தனிக்குடித்தனம் போனபோதிலும், அப்பழக்கத்திற்கு அவள் அடிமைப்பட்டவள்;. ஒண்டியாருந்தாலும் ஒழுக்கத்தைத் தனவதி தக்கவைத்துக்கொண்டிருந்தாள்.  வட்டில் விளக்க குளித்துவிட்டு அன்றைய தினத்தைத் துவக்கும்படி ஆயத்தமானாள் தனவதி. உதவிக்கென்று வீட்டில் யாருமில்லை.  மண் தரையில் வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணை விளக்கை அணைக்கக் குனிந்தாள். அதற்கு மேலே ஒரு ஆணியில் அவளது கணவனின் புகைப்படம் தொங்கிக்கொண்டிருந்தது. விளக்கை வாயினால் ஊதி அணைக்கக் குணிந்த தனவதியின் தலையில் ஆணியில் தொங்கிக்கொண்டிருந்த அந்த புகைப்படம் உதிர்ந்தது. கணவனின் படம் தலையில் விழ, லி  எடுத்தாலும், புருஷனின் புகைப்படைத்தை தலையில் விழுந்த பூவாகத்தான் அவளது மனது நினைத்தது. சட்டென கணவனைப் பற்றிய நினைவு அவளுக்கு

தன்னை நேசித்த வாலிபன் ஒருவனின் அன்புக்கு தன்னைப் பறிகொடுத்து, பெற்றோர் வற்புறுத்தியும் பிடிவாதத்தினால் அவனையேக் கைப்பிடித்து வாழ்ந்தவள் தனவதி. திருமணமாகி இருபத்திரெண்டாம் நாள் இல்லத்தை விட்டு இராணுவப் பணிக்குச் சென்றான் கணவன். வாய் நிறையப் புண்னகையோடு போய்வாங்க என மனதில்லையென்றாலும், விடை கொடுத்து அனுப்பினாள். பணிக்குச் சென்ற பதினைந்தாம் மாதம் அன்று தீடீரென தனவதியினை அருகாமையிலிருந்த அரசு அலுவலகத்தின் அதிகாரி இருவர் தேடி வந்தனர். வீட்டு வாசலில் வந்து மௌமாக நின்றுகொண்டிருந்த அவர்களை யாரென்று அறியாமல் ஏற இறங்க பார்த்து திகைத்துப் போனாள் தனவதி. ஏனென்றால் அவளைத் தேடி உதவிக் கென்று கூட யாரும் இதுவரை வந்ததில்லை. வந்தவர்களை வீதியில் நிறுத்தாமல், வீட்டிடை ஒட்டி வெளியே கட்டப்பட்டிருந்த மண் திண்ணையில் தேடி வந்த அதிகாரிகளை உட்காரச் சொல்லிவிட்டு, தாய் தன்னைப் பழக்கப்படுத்தியபடியே, அவர்களிடத்தில் செய்தியைக் கூட கேட்காமல், விவரம் ஏதும் அறியாமல், வீட்டுக்கு உள்ளே ஓடி இரண்டு செம்புகள் நிறைய தண்ணீர் மொண்டு வந்து கொடுத்தாள். வந்தவர்களோ நின்றுகொண்டேயிருந்தார்கள், தண்ணீரைக் குடிக்கக் கொடுத்தும், குடிக்க மனதில்லாமல் தன்னையே அவர்கள் பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டு பதபதைத்தாள் தனவதி. வந்த விசயம் என்ன? என்று தனவதி கேட்கும் முன்னே, வந்தவர்களின் வாயிலிருந்து விசயம் வெளிவந்தது, அது தவதிக்கு விசச் செய்தி. உனது கணவன் போரில் வீர மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்தியே அது. அதிகாரிகளின் செய்தியினைத் தொடர்ந்து, இரண்டு தினங்களில் விமானத்தில் வந்தடைந்தது கணவனது உடல், ஒப்படைக்க அதிகாரிகள் வருவது அறிவிக்கப்பட்டு, வாசலுக்கு வெளியிலேயே காத்துக் கிடந்தாள். விபரம் அறியாமல் அன்று இரண்டு செம்புகளில் தண்ணீர் கொடுத்த தனவதி, இரண்டு கண்களிலும் கண்ணீரோடு கணவனின் உடலை அதிகாரிகளின் கையிலிருந்து வாங்கிக்கொண்டாள்

அருகாமையிலிருந்த கிராமத்தினர் அனைவரும் புடைசூழ வந்தனர். துப்பாக்கியுடன் அநேக இராணுவ வீரர்கள் கணவனது உடலைச் சூழ்ந்து நின்றனர். வேடிக்கை பார்த்தோர் ஒரு பக்கம், ஆனால் தனவதியின் மனதோ வேதனையின் பக்கம். கூட்டத்தின் நடுவே தனது தாயும் தகப்பனும் நிற்பதையும் அவளது கண்கள் கண்டன. அரசு வண்டிகள் பல வர, அரசாங்கச் செலவில் அத்தனை ஏற்பாடுகளும் செய்யப்பட, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மதிவாணனும் தனவதியின் வீட்டில் ஒழுங்குகளைக் கவனித்துக்கொண்டிருந்தார். கணவனின் பிணத்துக்கு முன்னே அவள் நின்றது அவளும் இராணுவப்படையில் அங்கம் என்பதைப் போன்ற எண்ணத்தையே சூழ்ந்து நின்றோரின் நினைவலையில் சுற்றிவந்தது. போர்த்திக்கொண்ட போர்வையையே போரில் பறிகொடுத்துவிட்டு அவள் நின்றுகொண்டிருந்த காட்சி அங்கு நின்ற வீரர்களின் வீரத்தையும் கலைத்தது. இத்தனைக்கும் மத்தியில், அரசு மரியாதையுடன் வீட்டை விட்டு தனது கணவனின் இறுதி ஊர்வலம் புறப்பட, தனவதியும் புதைக்கும் இடம் வரைச் சென்று கணவனுக்கு விடைகொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். தான் நம்பியிருந்த, கணவனையும் தரைக்குத் தாரை வார்த்துவிட்டுத் தனியாகவே வாழ்ந்தாள் தனவதி. அப்போது அவளுக்கு வயது இருபத்து மூன்று. கணவன் பிணமானபின்னும், கணவன் இறந்ததற்கான அரசு உதவிப் பணம் அவளை மாதாமாதம் தேடி வந்ததால், தனது வாழ்க்கையைக் கழித்துக்கொண்டிருந்தாள். கணவன் இறந்தபோதிலும், மறுமணம் செய்யாமலேயே வாழ்க்கையை கடத்தினாள்

கணவனது புகைப்படம் தனது தலையின் மேல் விழுந்தபோது, இத்தனை நினைவுகளும் அலையலையாய் அவளது நினைவில் வந்து சென்றன. அந்தப் புயலில் அவளது மனம் சிக்கித் தவித்தது. பாசத்துக்கு அவள் பாடப்புத்தகம், அவளைத் தேடி தாய் வர மறந்தாலும், குருவிகள், நாய்கள், பூனைகள் என பல விலங்குகள் அவளுக்குச் சொந்தக்காரர்களாகி தினந்தினம் அவளைத் தேடி வந்தன. அவைகளுக்காக இவளும், இவளுக்காக அவைகளும் காத்திருந்த காட்சி, இறைவன் அமைத்துக்கொடுத்த பந்தம், அதிலே சற்று கிடைத்தது அவளுக்கு ஆனந்தம்

தொட்டில் பழக்கத்தை சுடுகாடு மட்டும் கொண்டு சென்றாள் தனவதி, ஆனால், அவளது வீட்டில் தொட்டில் ஆடாது போயிற்று. தொட்டிலில் ஆட்டியவர்களும் அவளைத் தேடாது மறந்துவிட்டனர். சொத்தை விட்டுச் சென்ற புருஷன் அவளது வயிற்றில் வித்தை விட்டுச் செல்லாது போனான். வித்தில்லையானாலும் விதவையாய், வயதாகி அந்த வீட்டைத் தனது இறுதியாக்கி யாரும் துணைக்கில்லாதவளாக, தனியாகவே உயிர் நீத்தாள், இருபத்து மூன்றே வயது, மற்றொருவனுடன் வாழ வயதிருந்தபோதிலும், தொண்ணூற்றொன்பது வயதுவரை வாழ்ந்து தரைக்குச் சொந்தமானாள் தனவதி. அனாதையாய் இறந்து கிடந்த அவளையும் அரசாங்கமே அடக்கம் செய்தது. இறந்தது கூட தெரியாமல் வாழ்ந்த அவர்களது பெற்றோர்களால் அவள் இறுதி மூச்சு விடுவதைப் பார்க்க முடியாமல் போயிற்று. காதலித்து அவள் கட்டிய கணவனுக்காக கண்களை அடைத்துக்கொண்டு, பெற்றவர்களே அவளை அனாதையாக்கியிருந்தனர். பலமுறை பெற்றோரைத் தேடிச் சென்றபோதிலும், 'போடி' என்று விரட்டியடித்த அவர்களால் வாடிப்போய் வாழ்ந்தாள் அவள். தவறு செய்துவிட்டேன் என்ற நினைவு அவளுக்கு. முடிச்சு போட்டதற்குப் பின், கணவனும் முடிந்துபோனதற்குப் பின் தான் திருந்திவிட்டதை பெற்றோருக்கு காட்டியும் அர்த்தமில்லையே. காதலுக்கு எதிரான வைராக்கியம் பெற்றோருக்கு, தனவதி கணவனை இழந்த பின்னும் அவளை வாழவைக்க மனதற்றவர்களாகிப்போயிருந்தார்கள். தவறிப்போய்விட்டாலும் பிள்ளை என ஒரே மகளை ஏற்றுக்கொள்ள மனதற்ற தனவதியின் தாயை, உலகம் பிள்ளை பெற்ற மலடியாகவே பார்த்தது. விட்டுக்கொடுக்காததால் உறவு பட்டுப்போனது. கணவன் இழந்த விதவை, பெற்றோரிருந்தும் அனாதை தனவதியின் நிலை இது. கருவறை கொடுத்தவர்கள் மறந்துவிட்ட அவளை கல்லறை இடம் கொடுத்து ஏற்றுக்கொண்டது

மனதைக் கொடுத்து மனிதனை வாங்கி
மனிதனை இழந்து மனது வீங்கி
பெற்றவரையும் பிள்ளையற்றவராக்கி
பிள்ளையானாலும் பெற்றோரற்று
மற்றோர்க்கு முன் மரணம் 
இது காதலில் தனவதிக்குக் கிடைத்த சன்மானம்